இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் தாய் சின்னம்மா தந்தை சுப்பிரமணியம் தம்பதிகளுக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்). 1991 இல் இந்துமகா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராளியானார். இளம் வயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் உட்படப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடத்திலும், மக்களிடத்திலும் அபிமானம்பெற்ற தலைவராக விளங்கியவர். அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு உயர்மட்டச் சந்திப்புகளிலும் இயக்க அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்றவர். சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடமும் நன்கு பரிச்சயமானவர். புலிகளின் வீழ்ச்சியை அடுத்துப் பல்லாயிரக்கணக்கான போராளிகளுடன் இலங்கை அரசின் சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாமிலும் நான்காண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு 2013 இல் விடுவிக்கப்பட்டதும் திருமணம் செய்து பொதுவாழ்வில் ஈடுபட்டார்.